Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

நாம் கர்த்தருடைய ஊழியக்காரர்களை நேசிக்கவும், கனப்படுத்தவும் வேண்டும். கர்த்தருடைய ஊழியர்களுக்கு விரோதமாகப் பேசுவது கர்த்தரையே தூஷிப்பதற்க்குச் சமானம். ஆனால் கடைசி காலத்தில் ஊழியக்காரர்கள் என்ற போர்வையில் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு அநேக ஓநாய்கள் அலைவார்கள் என்று சொல்லி நம் ஆண்டவர் எச்சரித்து இருக்கிறார், நாம் அவர்களை இனங்கண்டு அவர்களை விட்டு ஒதுங்க வேண்டும். இல்லாவிட்டால் நம்மையும் நமது குடும்பத்தாரையும் வஞ்சிப்பார்கள். நம்மை ஆக்கினைக்கு நேராய் இழுத்துச் செல்வார்கள். எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கள்ள ஊழியர்களைக் குறித்து ஜனங்களை எச்சரிப்பது எமது கடைமை. இது ஊழியர்களை குற்றம்சொல்லுவதல்ல, கள்ள ஊழியர்களை தேவ ஊழியர்கள் என்று சொல்லுவதே தூஷணம் ஆகும். கள்ள ஊழியர்களை இனம்கண்டு ஒதுக்கிய எபேசு சபையை ஆண்டவர் பாராட்டுகிறார். உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்…. அறிந்திருக்கிறேன். (வெளி 2:2)

கள்ள ஊழியர்களை எப்படிக் கண்டுகொள்வது. இந்த 6 நிமிட வீடியோவில் வாட்ச்மென் சகோதரர்கள் கொடுக்கும் சில சிந்தனைகளைக் கவனியுங்கள்:

இக்கட்டுரையின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்

“பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்”, “பணம் பாதாளம் வரை பாயும்” என்பது போன்ற பணத்தைப் போற்றும் வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு உலகத்தாரைப்போல சிந்திக்கப் பழகிவிட்ட நம்மை “பண ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் வேர்” என்ற எச்சரிப்பின் வேதவார்த்தை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. காரணம் உலகத்தின் சேவகனாய் மாறிப்போன நமது சமகால கிறிஸ்தவமும்கூட பணத்தை “ஆசீர்வாதம்” என்றே போதித்து நமது சிந்தையையும், நோக்கத்தையும் பணத்துக்கு நேராய் திருப்பி விட்டது. “பணம் பாவமல்ல பண ஆசைதான் பாவம்” என்ற அர்த்தமற்ற, அபத்த உபதேசத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விட்டோம். பணம் ஆசீர்வாதமென்றால் அந்த ஆசீர்வாதத்தை வாஞ்சிப்பது எப்படி தீமையாக முடியும் என்று நாம் ஏன் சிந்திப்பதில்லை????

பாவத்தின் கசப்பை அறியாமல் நாம் பாவத்தை வெறுக்க முடியாது. பாவத்தின் கொடூரத்தைப் பார்க்க வேண்டுமானால் அந்தக் கசப்பான பாத்திரத்தின் வண்டல்களைக் குடித்தவராய் கோரச்சிலுவையில் தொங்கும் ஆட்டுக்குட்டியானவரைப் பாருங்கள்! அவரை சிலுவையில் தொங்கக்கண்ட ஒருவனும் பாவத்தை இனி நேசித்து “திருட்டுத்தண்ணீர் தித்திக்கும்! அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும்” என்று அதில் லயித்திருக்க முடியாது. பண ஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேர் என்று வேதம் ஏன் சொல்லுகிறது என்பதை அறிந்துகொள்ள பணமும் வியாபாரமும் உலகத்திலும், தேவனுடைய இருதயத்திலும் உண்டாக்கிவைத்திருக்கும் ரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்! பின்னர் புரியும் புதிய உடன்படிக்கையின் அடிப்படை என்ன என்பதும், ஏன் கிறிஸ்து தரித்திரருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் சொன்னார் என்பதும்!!

பணம் நல்லதா என்று ஒரு மிஸ்டர் எக்ஸைக் கேட்டால் என்ன சொல்லுவார்?

ஆம், பணம் நிச்சயம் நல்லது ஏனென்றால், பணத்தினால்தான் நானும் என் குடும்பமும் மூன்று வேளை பசியாறுகிறோம், ஒரு நல்ல வாகனத்தில் பயணிக்கிறோம். பணம் இருப்பதால்தான் நாங்கள் எல்லா வசதியையும் பெற்று சுகமாய் வாழ்கிறோம்…So Money is God’s Blessing!!!

பணம் நல்லதா என்று இன்னொரு இளம் விதவையைக் கேட்கிறோம். இவர் வேறு யாருமல்ல நாம் அன்றாடம் செய்தித்தாளில் பல மனிதருடைய சோகக்கதைகளைப் படித்து “உச்” கொட்டுகிறோமே அவர்களில் ஒருவர். அவரது கணவர் வறுமையின் காரணமாக வட்டிக்குக் கடன் வாங்கி வேலை செய்து சம்பாதிக்க வெளிநாடு போய் சில நாட்களிலேயே மர்மமான முறையில் இறந்துவிட்டார். கடன் பாரம் அழுத்துகிறது. பெற்ற பிள்ளைக்கு மூன்று வேளை உணவு கொடுக்க முடியவில்லை. உறவினர் கைவிட்டு விட்டனர். ஆரோக்கியமான உணவுக்கு வழியின்றி பிள்ளை வியாதிப்பட்டு மரித்துவிட்டது. பசி, நிந்தை, சோகம், வறுமை, இழப்பு எல்லாம் பணத்தால்…. இவர் பணத்தைக்குறித்து என்ன சொல்லுவார்?

நீங்கள் ஒரு தகப்பனாக/தாயாக இருந்தால் ஒரு உன்னத நோக்கத்துக்காக மேற்கண்ட இருவரையும் பூமியில் படைத்து, அவர்களுக்கு ஒரு குடும்பத்தையும் கொடுத்து, இருவரையும் ஒரே விதமாக நேசிக்கும் தகப்பனாகக் கர்த்தர் அந்தப் பணத்தை எப்படிப் பார்ப்பார் என்பதை இப்போது நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்! மிஸ்டர் எக்ஸ் போன்ற மைனாரிட்டிகளுக்காக சந்தோஷப்படுவாரா? அல்லது அந்த இளம் விதவை போன்ற உலகமெங்கும் பரவிவாழும் வறிய மெஜாரிட்டிக்காக கண்ணீர் விடுவாரா??

இன்று உலகத்தில் பசியால் மரிக்கும் மனிதர் குறிப்பாக குழந்தைகள் ஏராளம்! தாயின் வயிற்றிலிருக்கும்போதே போதுமான உணவின்றி கர்ப்பத்திலேயே மரித்து பிணமாய் இந்த உலகில் வந்து விழும் ஜீவன்கள் ஏராளம்! நாள்தோறும் மருத்துவ வசதியின்றி மரிப்போர் ஏராளம்! பணத்துக்காக அனுதினமும் நடக்கும் கொலைகள், குற்றங்கள் ஏராளம்! பணத்தினால் பிரிந்த குடும்பஉறவுகள் ஏராளம்! சுருக்கமாகச் சொன்னால் உலகம் குதறிப்போடப்பட்டிருக்கிறது. ஒருநாள் காலையிலிருந்து இரவு வரை பணத்துக்காக உங்களைச் சுற்றி அன்று நடந்த தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்கள் எத்தனை என்பதை ஒரு நோட்டில் எழுதுங்கள், பின்னர் சொல்லுங்கள் அந்தப் பணத்தை தேவன் படைத்தாரா? பணத்துக்கும் தேவநீதிக்கும் சம்பந்தமுண்டா? பணத்தை மையமாகக் கொண்ட உலகம் தேவ சித்தமா? பணம் தேவன் அங்கீகரித்த ஆசீர்வாதமா? தேவராஜ்ஜியத்தில் பணம் ஒரு அங்கமாகுமா?

சீஷர்கள் திருமுழுக்கு பெறுவதன் அர்த்தம் என்னவென்றால் இனி நானல்ல. “நான்” என்ற அந்தப் பழைய மனுஷன் சிலுவையில் அறையப்பட்டு விட்டான். இனி கிறிஸ்துவே என்னில் பிழைத்திருக்கிறார். இனி கிறிஸ்துபோல நடந்து கொள்ளுவேன்! கிறிஸ்து போல சிந்திப்பேன்! கிறிஸ்து பார்ப்பதுபோல பார்ப்பேன் என்று புதிய ஜீவனைப் பெற்றுக்கொண்டதற்கான அடையாளமாகத்தான் திருமுழுக்குப் பெற்றுக்கொள்வார்களாம்!!!! அந்த சீஷனிடம் ஒரு கேள்வி கேட்டால் அவன் தனது மீட்கப்பட்ட சுபாவப்படி அந்தக் காரியத்தை கிறிஸ்துவின் கண்கொண்டு பார்த்துத்தான் பதில் சொல்வானேயன்றி “தனக்கு அது எப்படி இருக்கிறது” என்ற சுயத்தின் அடிப்படையில் பதில் அளிக்க மாட்டான். நமது Facebook விவாதத்தில் பலரும் அளித்த கமெண்ட்டுகள் அப்படியே இருக்கிறது. அப்படி செய்தால் அடிப்படையில் எங்கோ தவறு இருக்கிறது என்று அர்த்தம். நாம் எப்படி ஒரு காரியத்தை ஆராய்ந்து பார்க்கிறோம்? நம்முடைய வரவு செலவை மாத்திரம் கணக்கெடுத்து பதிலளிக்கிறோமா? அல்லது ஒரு மகனாக தகப்பனது மனக்காயத்தை, பாரத்தை உணர்ந்து, நாம் புதிதாய் நுழைந்த பரலோக ராஜ்ஜியத்தின் மதிப்பீடுகளின் அடிப்படையில் பதிலளிக்கிறோமா?

சகோதரனே! நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்! வறுமை கொடுமையானதுதான், அதன் விளைவுகள் தேவனுடைய இருதயத்தை காயப்படுத்தும் என்பதும் உண்மைதான். ஆனால் தங்கள் கூற்றுப்படி வறுமைதான் தீமையே தவிர பணம் அல்ல. பணம் அந்த வறுமையின் காயத்தை ஆற்றும் அருமருந்தல்லவா? என்ற கேள்வி வரும்.

வறுமைக்குத் தீர்வு பணம் என்ற நிலைதான் கொடுமை! காரணம் பணம் நமது தயாளகுணமுள்ள தேவனின் படைப்பல்ல. அவர் நமது தேவையை சந்திக்கும் விதத்தைப் பாருங்கள், ஆக்ஸிஜன், சூரிய ஒளி, தண்ணீர் இப்படி எல்லாருக்கும் எல்லாவற்றையும் நிறைவாய்த் தந்து படைத்திருக்கிறார்.

அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். (மத் 5:45).

அவர் ஆதாமையும் ஏவாளையும் படைக்கும் முன்னரே அவர்கள் பசிக்கு ஒரு மரத்தையல்ல, ஒரு தோட்டத்தையே உருவாக்கினார். தாகத்துக்கு ஒரு கிணற்றையல்ல ஒரு நதியையே உண்டாக்கினார் (ஆதி 2:10). அதுதான் தேவராஜ்ஜியம்! அதுதான் ஆசீர்வாதம்.

ஆனால் பணம், வியாபாரம் போன்றவை மகாபாபிலோனாகிய உலகத்தின் (World System) தாக்கத்தால் மனிதன் உண்டாக்கியது. அது எல்லோருக்குமானது அல்ல! அது ஒருசார்புடையது, நயவஞ்சகமானது, அநீதியான உலகப்பொருள்(லூக் 16:9,11) என்று இயேசுவே அதைக் குறித்து சொல்லியிருக்கிறார்!

ஏன் அது அநீதியானது?

ஏனெனில் அது சிலரை மட்டும் வாழ்வாங்கு வாழ்விக்கிறது, பலரை வாட்டி வதைக்கிறது! சிலருக்கு மட்டும் எல்லாவற்றையும் தேவைக்கு அதிகமாகத் தருகிறது, பலரிடமிருந்து உள்ளதையும் பிடுங்கிக் கொள்கிறது! சிலரது வாழ்வை மட்டும் அது செழிப்பாக்குகிறது, பலரது வாழ்வை செல்லரிக்க வைக்கிறது! இது கொடுமை! இது அநியாயம்! இதை நீதியுள்ள தேவனால் சகிக்க முடியாது!! பரலோக ராஜ்ஜியத்தால் இதை ஜீரணிக்க முடியாது!! தேவாவியால் நிரப்பப்பட்ட பரிசுத்தவான்கள் பல வேளைகளில் மனதில் அழுத்திய இந்த பாரத்தைத் தாங்காமல் “ஐசுவரியவான்களே! உங்களுக்கு ஐயோ!!” என்று அலறியிருக்கிறார்கள் (யாக் 5, மத் 19:23, மாற் 10:23-25, லூக் 6:24, லூக் 1:53, யாக் 1:10,11, வெளி 18)

தேவனுடைய சித்தம் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும், உயர்வு தாழ்வு என்பது கூடாது என்பதே! பரலோக ராஜ்ஜியம் குறித்த முதல் அறிமுகமே “பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் (லூக்கா 3:4)” என்று உரத்த குரலில் அறிவிக்கிறது. ஒரு கூட்டத்தில் ஒருவன் பசியாயிருக்க மற்றொருவன் அதைக் கண்டும் காணாமல் தான் மாத்திரம் புசித்துக் குடித்து அதினால் மகிழ்ச்சியாய் தேவனுக்கு நன்றி செலுத்துவானானால் அவன் தேவபிள்ளையானாலும் அவன் மீது தேவகோபம் பற்றி எரியும் என்று வேதம் தெளிவாகச் சொல்லுகிறது. இந்த சுபாவத்தின் நிமித்தம் கொரிந்து சபையில் தேவபிள்ளைகள் பலர் வியாதிப்பட்டிருந்தார்கள், சிலர் மரண தண்டணையும் பெற்றிருந்தார்கள். இதுதான் பவுல் 1 கொரிந்தியர் 11-ஆம் அதிகாரத்தை எழுதக் காரணமாயிற்று.

தேவனுடைய திருச்சபையின் அழகே முதல் நூற்றாண்டு சபையில் நிலவிய சமநிலையே! விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது (அப் 4:32). உலக வரலாற்றில் பணம் தரை மட்டும் தாழ்த்தப்பட்டு தேவன் உயர்த்தப்பட்டது அங்குதான்! வியாபாரத்தின் வஞ்சகங்கள் தவிடுபொடியாக்கப்பட்டது அங்குதான்! அந்த இடத்தில் அவர்கள் மத்தியில் பகிரப்பட்ட அந்தப் பணம் கடவுளின் எதிரியல்ல, கடவுளின் அடிமை என்பதை மனதார ஒப்புக்கொள்ளுகிறேன்.

தேவ ஆசீர்வாதம் என்பது என்ன? நானும் எனது சக மனிதனும் அதை சமமாய்ப் பெற்று மகிழ்ச்சியாயிருப்பது. நான் மாத்திரம் நன்றாயிருந்து என் சக மனிதன் வேதனைப்பட்டால் ஒரு கிறிஸ்தவனைப் பொறுத்தவரையில் அது தேவ ஆசீர்வாதமல்ல! அது நான் நன்றி செலுத்துமிடமல்ல, ஊழியம் செய்ய வேண்டிய இடம்!! அந்த சூழ்நிலையில் நான் என் ஆசீர்வாதத்தைக் குறித்து மாத்திரம் மகிழ்ந்திருப்பேனானால் நான் கிறிஸ்துவின் சுபாவமுடையவன் அல்ல. அவர் நாம் தரித்திரத்தில் இருப்பது கண்டு மனம் கொதித்து நம்மை மீட்க பூமிக்கு விரைந்தோடி வந்தாரே! அவர் துதிகளின் மத்தியில் பிதாவின் சமூகத்திலேயே தங்கித் தாபரித்திருந்திருக்கலாமே!

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே (II கொரிந்தியர் 8:9 ). “தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்!” என்று ஒரு உலகத்தைச் சேர்ந்த முற்போக்குக் கவிஞனே பாடியிருக்க, நான் கிறிஸ்தவன் என்ற பெயரை வைத்துக்கொண்டு, தேவனுடைய மனநிலையிலிருந்து சிந்திக்காமல் எனது ஆசீர்வாதம், எனது குடும்ப நன்மை பற்றி மாத்திரம் கருத்தாயிருப்பேனானால் அது வெட்கக்கேடு!! அப்படிப்பட்ட ஒரு ஆசீர்வாதத்துக்காக வாழ்வதைவிட மரிப்பதே மேல்!

பணம் எல்லோருக்கும் ஆக்ஸிஜன், சூரியஒளி போல சமமாய் கிடைக்குமானால் அது நல்லது, தேவனிடத்திலிருந்து வந்தது என்று ஒரு கிறிஸ்துவின் கண்கொண்டு பார்க்கும் கிறிஸ்தவனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். இல்லாத பட்சத்தில் அது பரலோக ராஜ்ஜியத்துக்கு எதிரானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் அல்ல. இன்னும் பணத்தின், வியாபாரமுறையின் தீமை குறித்து நிறைய பேசவேண்டியிருக்கிறது. “சகோதரனே! உன்னைக் குறித்து என்ன?” என்ற பரிகாசங்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் காரியத்தில் எனது பல தோல்விகளை கனியற்ற வாழ்க்கையைக் குறித்து ஒளிவுமறைவில்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டியதுமிருக்கிறது. அதுவே எனது/நமது ஆவிக்குரிய முன்னேற்றத்துக்கு ஒரு ஆரம்பமாக அமையட்டும்.

(கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து தியானிப்போம்..)

-வாட்ச்மென்

Money is God’s Enemy. Agree or Disagree? என்று ஒரு பதிவை facebook-இல் பதித்திருந்தேன், பலரும் இந்தக் கருத்துக்கு முரண்பட்டு எழுதியிருந்தார்கள். சிலர் கிண்டலையும் கேலியையும் அள்ளி வீசியிருந்தார்கள். எதிர்மறைக்கருத்துக்களும் பரிகாசமும் வருமென்று தெரிந்துதான் அந்தப் பதிவையே அங்கு பதித்திருந்தேன். எனது அந்த facebook பதிவிற்கான விளக்கமே இக்கட்டுரைத் தொடர். இதன் நோக்கம் பொழுதுபோக்கோ அல்லது விவாதத்தில் வெல்லுவதோ கிடையாது. கடைசிகாலக் கடிகாரம் கடைசி நிமிடத்தின் செகண்டுகளை கடந்துகொண்டிருக்க நாம் ஜீவனுக்காக இடுக்கமான வாசலண்டை நின்று போராடிக்கொண்டிருக்கிறோம். இது நமது கடைசி நிமிட ஜீவமரணப் போராட்டம் பற்றிய கட்டுரை!

பணம் தவறல்ல, பண ஆசைதான் பாவமென்று வேதம் கூறுகிறது எனவே அம்மட்டில் நிறுத்திக்கொள்ளலாம் என்று தயவுசெய்து மகா முக்கியமான சத்தியத்துக்கு செவியை விலக்கிவிடாதீர்கள்! பணம் பாவமில்லையென்றால் “அநீதியான உலகப்பொருள்(லூக் 16:9,11)” என்று ஆண்டவர் சொல்வாரோ! பணம் நல்லது என்றால் அதன்மீது வைக்கும் ஆசை எப்படி தீமையாக முடியும்?

அப்படியானால் பணத்தை அநீதியென்று சொல்லும் உங்கள் பாக்கெட்டில் பணமில்லையா? நீங்கள் சம்பாதிக்கவில்லையா? பணத்தைப் பயன்படுத்தவில்லையா?… உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் இத்தொடரில் பதில் இருக்கிறது.

சர்வவல்லவருக்கு ஒரு எதிரி இருக்க முடியுமோ?

நம் தேவன் தன்னிகரற்றவர். யாருடனும் ஒப்பிடமுடியாத ராஜாதிராஜா! ஆயிரங்கோடி லூசிபர்கள் ஒருங்கே வந்தாலும் அவர் பாதத்தில் சுண்டுவிரலைக்கூட அசைக்க முடியாது. அப்படிப்பட்ட ஒப்புயர்வற்ற தேவனுக்கு யாரேனும் எதிரியாக இயலுமா? அவரை எதிரியென்று நினைத்துப் பார்க்கும் தகுதியாவது தரணியில் யாருக்கேனும் உண்டா? இல்லை இல்லவேயில்லை.

தகுதியிலேயோ, வல்லமையிலேயோ, மகத்துவத்திலேயோ யாரும் அவருக்கு இணைவைக்க முடியாது. அவர் சிருஷ்டிக்கர்த்தர், சருவலோக அதிபதி, துதிக்கும் தொழுகைக்கும் அவர் மட்டுமே பாத்திரர். ஆனால் அற்பத்திலும் அற்பமான நம்மை என்று அவர் தனக்குப் பொக்கிஷமாகக் கொண்டாரோ, என்று தகுதியற்ற நமக்காக தம்மைத் தரைமட்டும் தாழ்த்தினாரோ அன்று நாமே சிலவற்றை அவர் அளவுக்கு நம்வாழ்வில் உயர்த்திவைத்து அவற்றை அவருக்கு எதிரியாக்கிவிட்டோம்.

இன்னும் புரியும்படி சொல்லுகிறேன். பல தேசங்களைக் கட்டி ஆளும் ஒரு சக்கரவர்த்தி இருந்தார், அவருக்கு பூமியின் அரசர் எல்லோரும் கப்பம் கட்டினார்கள். அவரை எதிர்த்துப் பேசக்கூட துணிவு ஒருவனுக்கும் இல்லை. அப்படிப்பட்ட சக்கரவர்த்திக்கு ஐந்து வயதில் ஒரு சின்ன மகள் இருந்தாள். அவள் மீது அவர் தன் உயிரையே வைத்திருந்தார். அந்த சின்ன மகளுக்கு நியமிக்கபட்ட ஒரு வேலைக்காரி தந்திரமாக குழந்தையை வசப்படுத்தி அவள் அப்பாவை முற்றிலும் வெறுக்கச் செய்து மனரீதியாக அவரைவிட்டு முற்றிலும் குழந்தையைப் பிரித்துவிட்டாள் என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சக்கரவர்த்தி அந்த அற்ப வேலைக்காரியை தன் எதிரியாகப் பாவிப்பாரா இல்லையா? அப்படித்ததான் நாம் தன்னிகரற்ற தேவனுக்கு பல அற்ப எதிரிகளை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

ஒரு கல் தேவனுக்கு எதிரியாக முடியுமா?

நிச்சயம் இல்லை. ஆனால் அந்தக் கல்லை விக்கிரகமாகச் செதுக்கும் போதோ அது அவருக்கு எதிராகிவிடும் அல்லவா?

இல்லை, மனிதர் அதை வணங்கும்போதுதான் அது அவருக்கு எதிரானது அதுவரை அது வெறும் பொம்மையே என்று சிலர் வாதிடுவார்கள்!

நான் அதை மறுக்கிறேன், நியாயப்பிரமாணத்தின் பிரதான கட்டளைகளில் ஒன்று ” மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம் (யாத் 20:4). ஏன் அவைகளை உண்டாக்கக்கூடாது? பொம்மையை உண்டாக்குவது குழந்தைகள் விளையாடுவதற்கு ஆனால் விக்கிரகத்தை உண்டாக்குவதே அதைத் தொழுதுகொள்ளத்தான்! சிந்திக்கத் தெரிந்த மனுக்குலமே! உனக்கு பொம்மை வேறு, விக்கிரகம் வேறு என்பது தெரியாதா?

இப்பொழுது சொல்லுங்கள், ஒரு காகிதம் தேவனுக்கு எதிரியாக முடியுமா?

நிச்சயம் இல்லை. ஆனால் அது பணமாக அச்சிடப்படும் போதோ???!!

இல்லவே இல்லை என்பதுதான் பலரின் வாதம். பணம் பாவம் இல்லை அதற்கு மனிதன் அடிமையாவதுதான் பாவம் என்பார்கள். “விக்கிரகம் பாவம் இல்லை அதை வணங்குவதுதான் பாவம்” என்று சொல்லுவது போன்ற தவறான வாதம்தான் இது!

அதெப்படி?…விக்கிரகமும் பணமும் ஒன்றாகுமா சகோதரரே! விக்கிரகம் தேவனுக்கு அருவருப்பானது. ஆனால் பணத்தையோ அவரே அதைப் படைத்தார், தனது பிள்ளைகளுக்குக் கொடுத்து அவர்களை ஆசீர்வதிக்கிறார். ஆண்டவர் இயேசுவே தச்சுத்தொழில் செய்து பணம் சம்பாதித்தார் அப்படிப்பட்ட பணம் பாவமாகுமா? அது தேவனுக்கு எதிரியாகுமா?? இப்படிப் பல கேள்விகள் அடுக்கடுக்காக இந்நேரத்தில் நமக்கு எழும்பும்.

பணத்தை தேவன் படைத்தாரா?

எங்களது Facebook விவாதத்தில்கூட ஒரு சகோதரர் “Money is also created by Him” என்று எழுதியிருந்தார். இது முற்றிலும் தவறு. தேவன் பணத்தை சிருஷ்டிக்கவில்லை. பணம் விழுந்துபோன மனிதனின் படைப்பு. ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் இருந்தபோது பணமோ, பணம் பற்றிய சிந்தனையோ, பணம் குறித்த தீர்க்கதரிசனமோ எதுவுமே அங்கு இல்லை. ஒருவேளை மனிதன் பாவத்தில் விழாமல் தேவ சித்தத்தின்படி பலுகிப் பெருகி பூமியை நிரப்பியிருந்திருந்தால் கூட பணத்திற்கு அங்கே இடமேயிருந்திருக்காது.

பணம் என்பது வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதம்.வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதத்தை தீமையாக மாற்றுவது எது? அதற்குப் பின்னால் இருக்கும் சுயநலத்தை மையமாகக் கொண்ட வர்த்தக முறையே!! இந்த வர்த்தக முறை மனிதன் விழுந்துபோனவுடனேயே தொடங்கிவிட்டது.

இந்த வியாபார முறையில் அப்படியென்ன தீமை இருக்கிறது?

“என்னிடம் உள்ள இந்தப் பொருள் உனக்குத் தேவையென்றால் உன்னிடம் உள்ள இதே மதிப்புள்ள எனக்குத் தேவையான ஒன்றை அதற்குப் பதிலீடாகக் கொடு!” என்பதுதான் வியாபாரத்தின் ஒட்டுமொத்த சாராம்சமாகும். அக்கால தானிய வர்த்தகத்திலிருந்து இக்கால மென்பொருள் வர்த்தகம் வரைக்கும் இதுவே அடிப்படை. சுயத்தின் வலைக்குள் சிக்குண்ட வீழ்ந்துபோன மனித குலத்துக்கு இந்த வர்த்தக முறையைத் தவிர வேறு எந்த மாற்றும் இல்லை. “வியாபாரம்” என்ற ஒற்றைச் சொல்தான் மனிதன் ஒருவரையொருவர் சார்ந்து வாழவேண்டும் என்ற நல்ல நிர்பந்தத்துக்குள் நம்மை வைத்திருக்கிறது. இல்லாவிட்டால் சுயநல மிருகங்களாகிய நாம் ஒருவரை கடித்துப் பட்சித்து ஏகமாய் அழிந்திருப்போம். விஷத்தை விஷத்தால் முறிப்பதுப்போல சுயநலத்தின் மொத்த உருவாய் மாறிப்போன மனித இனம் பூமியில் நீடித்திருக்க வேண்டுமென்றால் அந்த சுயநலத்தையே மையமாகக் கொண்டு ஆனால் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ நிர்பந்திக்கும் ஒரு வாழ்க்கைமுறைதான் சரியான தீர்வு.

நான் பிழைக்க எனக்கு உணவுப் பொருள் விளைவிக்கும் ஒரு விவசாயி வேண்டும், அதை எனக்கு விற்க ஒரு வியாபாரி வேண்டும். அவர்கள் இருவரும் பிழைக்க வேண்டுமென்றால் அவர்களுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து அவர்களது பொருளை நுகர நான் வேண்டும். இப்படி காலைமுதல் இரவு வரை என் வாழ்வில் எனக்கு தேவையானவற்றை தருவோரும் அதற்கு ஈடாய் அவர்கள் என்னிடமுள்ள சமமான மதிப்புள்ள ஒன்றைப் பெற்றுக்கொண்டு பிழைப்போரும் ஏராளம்! ஏராளம்! இதுதான் இன்றைய உலகை இயங்க வைக்கிறது.

சுயநலமிக்க இருவர் ஒருவரையொருவர் சார்ந்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம்!! இன்று நாம் பிழைத்திருக்கவும், முன்னேறவும் காரணம் இந்த வர்த்தக முறையே! அத்தியிலை அணிந்த மனிதனை கோட்சூட் போடவைத்து அழகுபார்த்தது இந்த வர்த்தகமுறையே! புறாக்கள் கால்களில் செய்தியைக் கட்டி அனுப்பிய மனிதனை இன்று சாட்டிலைட்களை அனுப்ப வைத்தது இந்த வியாபாரமுறையே! சற்று சிந்தித்துப் பாருங்கள்! இது மாத்திரம் இல்லாதிருந்தால் நாம் இன்னும் கற்காலத்திலேயே இருந்திருப்போம். இன்று நாம் காணும் மேகத்தை வருடும் பலமாடிக் கட்டிடங்களும், அதிநவீன வாகனங்களும், தொலைதொடர்பு சாதனங்களும் எல்லாம் எல்லாம் இதனால் உண்டானவை.

ஆனால் இந்த வர்த்தகமுறை மனிதனை அவன் சுயநலத்திலிருந்து ஒருநாளும் விடுதலையாக்காது மாறாக அவனை இன்னும் பெரிய சுயநலக்காரனாக மாற்றும். என்று மனிதன் சுயநலத்தை விட்டுவிடுகிறானோ அன்று உலகின் மொத்த வியாபாரமும் படுத்துவிடும். அகிலத்தின் முன்னேற்றச் சக்கரம் அடியோடு நின்றுவிடும். ஒட்டுமொத்த உலகமும் திசைமாறி பயணிக்கத் தொடங்கிவிடும். ஆனால் அது இயேசுவின் வருகைவரை நடக்க முடியாது, நடக்காது, ஏன் நடக்காது? இந்த உலகத்தை சுயநலக் கூண்டுக்குள் அடைத்து தன்விருப்பத்துக்கேற்றபடி இழுத்துச்செல்லும் கபட சூத்திரதாரி யார்? அவனுக்கு என்னவேண்டும்? நமது வியாபாரமுறையைப் பயன்படுத்தி அவன் சாதித்துக் கொண்டிருப்பது என்ன? போன்ற அதிர்ச்சிகரமான உன்மைகளை இந்தக் கட்டுரைத் தொடரில் விவாதிக்கப்போகிறோம்.

கரன்சி வருவதற்குமுன் ஆரம்பகாலத்தில் பண்டமாற்று முறை இருந்தது. பண்டமாற்று முறையென்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்க்கு ஈடான இன்னொரு பொருளைப் பெற்றுக்கொள்வதாகும். இதன் பரிணாம வளர்ச்சியே கரன்சி வர்த்தக முறை.

இந்த வர்த்தகமுறைதான் சகல தீமைகளுக்கும் ஊற்றுக்கண் என்பதை விளக்க உங்களை கற்காலத்துக்குக் கொண்டுசெல்ல விரும்புகிறேன். மனிதன் தான் நிர்வாணி என்பதை அறிந்தபின் அவனுக்கு உடை என்பது ஒரு அத்தியாவசியமான தேவையாயிற்று. நான் ஒரு நல்ல வேட்டைக்காரன் என்று வைத்துக்கொள்ளுங்கள், நான் மான்களை வேட்டையாடி அவற்றின் தோல்களை எடுத்து உடையாக மாற்ற என்னால் முடியும். எனக்கு அருகில் வசிக்கும் இன்னொரு நபர் ஒரு நல்ல தோட்டத்தை வைத்து பராமரிக்கிறார். ஆனால் அவரால் வேட்டையாட முடியாது. அவருக்கு உடை தேவை, எனக்கு நல்ல ஆரோக்கியமான கனிகள் தேவை.நாங்கள் இருவரும் பண்டத்தை மாற்றிக்கொள்ளுகிறோம்.

ஆஹா எத்தனை அருமையான உறவு! ஆனால் பிரச்சனை எங்கு உருவாகிறது தெரியுமா?

இங்கு காட்சியில் இன்னொரு புது நபர் நுழைகிறார். அவர் என்னைவிட சிறந்த வேட்டைக்காரன் என்று வைத்துக் கொள்ளுவோம். அவரால் புலிகளளைக் கூட வேட்டையாட முடியும். அவர் புலித்தோலில் அழகான உடை செய்து என் நண்பருக்குக் காட்டுகிறார். மான்தோலை விட புலித்தோல் உடை அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது, வியாபாரம் அவர் கைக்கு மாறுகிறது. நான் நஷ்டப்படுகிறேன். எனவே நான் எனது விட்ட வியாபாரத்தை மீண்டும் பிடிக்க ஏதேனும் புதுமையைப் புகுத்தி என் வாடிக்கையாளரை கவர வேண்டும் என்ற கட்டாயத்துக்குள் தள்ளப்படுகிறேன், இல்லாவிட்டால் என்னால் நிலைக்கவும், பிழைக்கவும் முடியாது. இங்குதான் போட்டி பிறக்கிறது, இங்குதான் முன்னேற்றமும் பிறக்கிறது. இன்று நாம் தொலைதொடர்பு சந்தையில் காணும் சகல அதிநவீனப் பொருட்களும் வர்த்தகப் போட்டியினால் விளைந்தவையே! இந்த வர்த்தகப் போட்டியே தெருவோர வியாபாரிகளிலிருந்து வல்லரசுகள்வரை யாவரையும் ஆட்டிவைக்கிறது. நம்மையெல்லாம் எங்கோ ஒரு முடிவை நோக்கி இழுத்துச் செல்லுகிறது.

இதன் விளைவாக போட்டி பொறாமை ஆதிக்க மனப்பான்மை பெருகி அன்பு தணிந்து போனது. ஏதேன் தோட்டத்தில் தேவ பிரசன்னத்தில் வாழ்ந்த மனிதனுக்கு தேவன் தேவன் ஆயத்தப்படுத்தியிருந்த வாழ்க்கைமுறை நிச்சயமாக இது அல்லவே அல்ல. மனிதனை தேவன் உருவாக்கும் முன்னரே அவனுடைய சகல தேவைகளையும் ஆயத்தம் செய்து தயாராக வைத்திருந்தார். சுருக்கமாகச் சொல்லப்போனால் ராஜபோக வாழ்க்கை!

தேவன் ஆதாம் ஏவாளிடம் எதிர்பார்த்ததெல்லாம் அவர்கள் தேவனை நேசித்து அவரோடு ஐக்கியம் கொள்ளவேண்டும், அவர்கள் ஒருவருக்கொருவர் அன்புசெலுத்தி ஐக்கியத்தில் வாழவேண்டும். அவர்கள் ஒருவேளை பாவத்தில் விழாமல் தேவசித்தப்படி பலுகிப் பெருகி பூமியெங்கும் பரவி இருந்திருப்பார்களானால்கூட அவர்களுக்கு தேவன் தந்த வாழ்க்கைமுறை முற்றிலும் வித்தியாசமானதாக இருந்திருக்கும்.

அந்த வாழ்க்கை சுயநலத்தையும் போட்டியையும் தூண்டிவிட்டு அன்பைத் தணியச் செய்யும் இன்றைய வர்த்தகமுறைபோல இல்லாமல். தியாகத்தையும் அன்பையும் மையமாகக் கொண்ட நீதியே உருவான ஒரு வாழ்க்கைமுறையாக இருந்திருக்கும். காரணம் மனிதன் ஏதேனில் வெளிச்சத்தில் வாழும்வரை தனது அனைத்துக் காரியங்களுக்காகவும் தேவனையே சார்ந்திருந்து சகலத்தையும் அவருடைய கரத்திலிருந்தே பெற்றுக்கொள்ளும் உன்னத நிலையிலிருந்தான். தேவன் வியாபாரி அல்ல, அவர் தகப்பன்! அவரிடமிருந்து வருவது அன்பு! அன்பு! அன்பு மட்டுமே!! அவர் பிள்ளைகளும் அப்படியே வாழும்படி செய்திருந்திருப்பார்.

ஆனால் அவனுக்கோ தேவனைச் சார்ந்திருக்க விரும்பவில்லை. சர்ப்பத்தின் பேச்சுக்கு செவிகொடுத்து நன்மைதீமையை நானே அறிந்து நானே என்வாழ்வைத் தீர்மானித்துக்கொள்ளுகிறேன் என்ற ஒரு அபாயகரமான முடிவை எடுத்து ஏதேனைவிட்டு வெளியே வந்தான். நன்மைதீமை அறியத்தக்க கனியைப் புசித்து கண்கள் திறக்கப்பட்ட(!) மேதாவியான மனிதனது அரிய கண்டுபிடிப்புதான் இந்த வர்த்தகமுறை.

என்று வியாபாரம் என்ற ஒன்று மனித சமுதாயத்தில் நுழைந்ததோ…அன்று மனித வரலாறு திசைமாறி பயணிக்கத் துவங்கிவிட்டது.

இதன் தொடர்ச்சியை வாசிக்க இங்கே சொடுக்கவும்

-வாட்ச்மென்

இது கிறிஸ்தவ உலகம் அறிந்துகொள்ள வேண்டிய மிக மிக மிக முக்கியமான சத்தியம் ஆகும். பாபிலோன் குறித்த சத்தியத்தை நாம் அறிந்துகொள்வதை சாத்தான் ஒருபோதும் விரும்பமாட்டான். ஏனெனில் பாபிலோனின் இரகசியத்துக்கு நம் கண்கள் திறக்கபட்டபின் நமது கிறிஸ்தவ வாழ்க்கை பழைய மாதிரி இருக்காது, இருக்க முடியாது. இந்த செய்தியை நாங்கள் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் பலநாள் வாஞ்சை!

இது நமது சமீபத்திய வேதபாடம் ஒன்றில் பயன்படுத்தப்பட்ட 55-நிமிடம் ஓடும் Keynote Presentation ஆகும். பின்னனி ஆடியோவில் ஒவ்வொரு slide-ம் தெளிவாக வேத அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது. தயவு செய்து ஒவ்வொரு slide-க்கும் வீடியோவை pause செய்து slide-ல் கொடுக்கபட்ட செய்திகளை கருத்தாக வாசித்து பின்னர் பின்னனி ஆடியோவைக் கேட்கவும். நோட்ஸ் எடுக்கும் பழக்கமுள்ளவர்கள் குறிப்பெடுத்துக் கொள்வது மிகவும் வசதியாக இருக்கும்.

தயவு செய்து இந்த வீடியோவை உங்களுக்குத் தெரிந்த ஊழியக்காரர்களோடும், விசுவாசிகளோடும், நண்பர்களோடும், உறவினர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சமீபத்தில் ஒரு மூத்த ஊழியர் பேஸ்புக்கில் இருந்த தனது நண்பர்களுக்கு ஒரு ஜெபக்குறிப்பை அனுப்பியிருந்தார் அதில் ஒரு பிரதி எனக்கும் வந்திருந்தது. அதாவது அவர் தனது ஊழியத்தளத்தை ஒரு பெருநகருக்கு மாற்றி அங்குள்ள மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப் போகிறாராம். அதற்காக ஜெபிக்க வேண்டுமாம், நல்ல விஷயம்தான்; ஆனால் அதற்காக அவர் அனுப்பியிருந்த ஜெபக்குறிப்புதான் எனக்கு ஜீரணிக்கக் கடினமாயிருந்தது.

அந்த ஜெபக்குறிப்பு இதுதான்: அந்த மாநகரில் ஒரு முக்கியப்பகுதியில் வாடகையே இல்லாமல் ஒரு நல்ல வாடகை வீடு கிடைக்க வேண்டுமாம். இது எப்படி இருக்கிறது?

இந்த ஜெபக்குறிப்பினை வேதவெளிச்சத்தில் ஆராயாமல் எத்தனைபேர் இதற்காக உருக்கமாக ஜெபிக்கத் தொடங்கியிருக்கிறார்களோ தெரியவில்லை. வஞ்சகமும் ஏமாற்றமும் நிறைந்த இந்த உலகில் நியாயமான வாடகைக்கு வீடு கிடைக்கவேண்டும் என்பது அவர் ஜெபக்குறிப்பாயிருந்தால் பரவாயில்லை அதற்காக ஜெபிக்கலாம். ஆனால் ஒரு மாநகரின் முக்கியப்பகுதியில் ஒரு ஏமாளி ஒரு வசதியான வீட்டைக் கட்டி அதை தனக்கு இலவசமாகக் கொடுப்பதற்க்குக் காத்திருக்க வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்ப்பது எத்தனை அசிங்கமான காரியம்!!

இதற்குப் பதிலாக இந்த ஊழியர் அந்த ஏமாளிக்கு என்ன கொடுப்பார்? தனது பாக்கெட்டில் இருந்து தேவ ஆசீர்வாத வாக்குத்தத்தங்களை எடுத்து தாராளமாக அள்ளிக் கொடுப்பார், இவரை ஆசீர்வதிக்கும்படி ஆண்டவருக்கு அன்புக் கட்டளையிடுவார். இது முதலீடற்ற, வாயில் வடை சுடும் வியாபாரமல்லவா?

நான் அந்தக் குறிப்பிட்ட ஊழியரை மட்டும் குறிவைத்து இந்தக் கட்டுரையை எழுதவில்லை. இதுபோல அடுத்தவன் பொருளை ஆசீர்வாத ஆசைகாட்டி அபகரித்துக் கொண்டு அதை “தேவ ஆசீர்வாதம்” என்று மேன்மை பாராட்டும் கபட்டு (அந்தி)கிறிஸ்தவ ஊழியர்கள் அநேகர் அநேகர் இன்று புற்றீசலாய் பறந்து வந்துகொண்டிருக்கிறார்கள்! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!

இந்த ஜெபக்குறிப்பைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது எங்கள் தெருவுக்கு காலை வேளைகளில் அடிக்கடி பவனிவரும் ஆன்மீக வண்டிதான், அந்த வண்டி பக்திப்பாடல்களை ஸ்பீக்கரில் சப்தமாக ஒலிபரப்பியபடி வரும். அந்த வண்டியை ஓட்டிவருபவர் ஒரு மகான்போல வேடமணிந்து வருவார். அவரிடம் மக்கள் பணத்தை காணிக்கையாகக் கொடுப்பார்கள். அதற்குப் பதிலாக அந்த மக்களுக்கு அவர் திருப்பித் தருவது என்ன தெரியுமா? ஒன்றுமில்லை…அந்த சின்ன வண்டிக்குள் இருக்கும் சுரூபத்தின் தரிசனம்தான். அதே சுரூபம் தங்கள் வீட்டிலிருந்தாலும்கூட ஜனங்கள் பணம் கொடுத்து வண்டிக்குள் இருக்கும் சுரூபத்தை தரிசித்துவிட்டுச் செல்வார்கள்.

போலி ஆன்மீகவாதி ஜனங்களுக்கு போலியான வாக்குறுதிகளையும், போலியான அனுபவங்களையும் கொடுத்து அதற்க்குப் பதிலீடாக அவர்களிடமிருந்து விலைமதிப்புடைய உலகப் பொருட்களை தனக்கு ஆதாயமாகப் பெற்றுக் கொள்ளுகிறான், உலகத்திலேயே அநியாயமான கொடுக்கல்-வாங்கல் வியாபாரம் என்று ஒன்று இருந்தால் அது இதுதான். இது போன்ற அநியாய வியாபாரத்தைப் பற்றித்தான் கிராமப்புறங்களில் அருமையாகச் சொல்வார்கள்

“நான் உமி கொண்டுவருகிறேன், நீ அவல் கொண்டுவா…நாம் இருவரும் அதை ஊதி ஊதித் தின்போம்”

பிரியமானவர்களே! பாலியல் தொழிலாளர்கள் கூட தனக்குப் பணம் கொடுக்கும் வாடிக்கையாளாரின் பணத்துக்குத் தகுந்த சேவையை தருகிறார்கள். அவர்கள் செய்வது சாக்கடைத் தொழிலாயிருந்தாலும் அதில் ஒரு சன்மார்க்கத்தைக் கடைப்பிடிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் உலகிலேயே மிக மோசமான வஞ்சகர்கள் இந்த ஆன்மீக வியாபாரிகள்தான். தாங்கள் செய்வது சன்மார்க்கத் தொழிலாயிருந்தாலும் அதை இவர்கள் செய்யும் விதம் சாக்கடையை விட துர்நாற்றமடிப்பதாயிருக்கிறது.

ஊழியர்கள் காணிக்கை வாங்குவதைக் குறித்து நான் குற்றம் சொல்லவேயில்லை. வேதமும் அதை அங்கீகரிக்கிறது. சுவிசேஷத்தை அறிவிப்பவனுக்கு சுவிசேஷத்தினால் பிழைப்புண்டாகவேண்டுமென்பது தேவ நியமம். ஆனால் உனக்கு சுவிசேஷம் அறிவித்துவிட்டு பதிலுக்கு உன்னையே பட்சிப்பேன் என்பது என்னவகை ஆன்மீகம்?

“பிறன் பொருளை இச்சியாதிருப்பாயாக…” என்ற பத்தாவது கட்டளை பழைய ஏற்பாட்டோடு முடிந்துவிட்டது என்று நினைத்து விட்டார்கள் போலும்,

இவருக்கு இலவசமாக வீட்டைக் கொடுத்த ஏமாளியை ஆண்டவர் ஆசீர்வதிப்பார் என்பதற்க்கு இவரால் கியாரண்டி கொடுக்க முடியுமா? அவருக்குக் குருட்டாம்போக்கில் ஒரு நன்மை நடந்துவிட்டால் போதும் இவரே அவருக்குக் கடவுளாகிவிடுவார். வாடகையில்லாமல் இலவசமாக வீட்டைத் திறந்துகொடுத்ததற்கே இவ்வளவு ஆசீர்வாதமென்றால் இவருக்கு வீட்டையே எழுதிக் கொடுத்துவிட்டால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவாரே! ஊழியக்காரர் என்ற போர்வையில் அலையும் பலர் இன்று அடுத்தவன் பணத்தில் கொழுக்கக் காரணம் இப்படிப்பட்ட வேதத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதை வாசிக்காமல் ஏமாறும் ஏமாளிகள் நாட்டில் நிறையப்பேர் இருப்பதே! ஜாக்கிரதை!!

கழைதின் யானையார் என்ற தமிழ்புலவர் எழுதிய புறநானூற்றுப் பாடல் ஒன்று பாடப் புத்தகங்களில் உள்ளது:

ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;

இதன் அர்த்தம் பிச்சை கேட்பது இழிவானது, ஆனால் அதைவிட அப்படிக் கேட்பவனிடம் பிச்சை கொடுக்கமாட்டேன் என்று மறுப்பது அதனினும் இழிவானது. பெற்றுக்கொள் என்று ஒருவனிடம் கொடுப்பது உயர்வானது ஆனால் அதைவிட ஒருவன் கொடுக்கும்போது பெற்றுக் கொள்ளேன் என்று மறுத்துவிடுவது அதனினும் உயர்வானது என்பதாகும்.

இத்தகைய உயர்வான பண்பை வேதாகமப் பரிசுத்தவான்கள் அனைவரிடத்திலும் நாம் பார்க்கலாம். அப்போஸ்தலர் பவுலின் சாட்சியைப் பாருங்கள்:

ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன். (அப் 20:33-35).

பழைய ஏற்பாட்டுக்கு வருவோம், தகப்பன் ஆபிரகாமின் சாட்சியைப் பாருங்கள்:

ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்…என்றான் (ஆதி 14:22,23).

1. ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கும் ஆண்டவர் (யோவா 10:11)
2. மந்தைக்காக தன் ஜீவனைக் கொடுக்கும் திருச்சபைத் தலைவர்கள்(1 தெச 2:8)
3. தன் சக சகோதரனுக்காக தன் ஜீவனைக் கொடுக்கும் விசுவாசி (1 யோவா 3:16)

பிரியமானவர்களே இந்த மூன்றும்தான் உண்மை கிறிஸ்தவத்தின் அடையாளம்!!! இதுதான் பிதாவின் பரலோகக் குடும்பம். ஆனால் தான் பிழைக்க அடுத்தவனுடையதை உருவிக்கொள்ளுவது மிருகத்தின்(அந்திகிறிஸ்தவ) மதம்.

எனக்கு ஒரு ஊழியரைப் மிகவும் பிடித்திருக்கிறது அவருடைய ஊழியத்துக்கு அவர் கேட்காமலேயே என் வீட்டை நானே இலவசமாக திறந்து கொடுக்க நினைக்கிறேன் என்றால் அது வேறுவிஷயம். ஆனால் அந்த ஊழியரே வந்து எனக்கு உங்கள் வீட்டை இலவசமாகத் திறந்து கொடுங்கள், உங்கள் பொருட்களையும் நகைகளையும் எனக்கு தாரைவார்த்துக் கொடுங்கள் அப்போது ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் என்று கேட்பதும் அப்படி எதிர்பார்ப்பதும் இரயிலில் மயக்க பிஸ்கட்டைக் கொடுத்து சூட்கேஸை லவட்டிச் செல்லும் ஜேப்படித் திருடனுடைய செயலுக்கு சமானம்.

இந்தக் காலத்தில் மிக மிக மிக எளிதாக வாழ்க்கையில் செட்டில் ஆக சிறந்த வழி ஊழியம்(!!??) செய்வது. காரணம் எந்த முதலீடும் தேவையில்லை, ஆம்வே மாதிரி ஆரம்ப நாட்களில் சற்று கடின உடல் உழைப்பு தேவைப்படும். ஒரு கூட்டம் சேர்ந்தபின்னர் எந்தக் கவலையுமில்லை, பின்னர் குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிடலாம். தன் காலத்துக்குப் பின் அந்த வருமானத்தை அப்படியே பிள்ளைகளுக்கு திருப்பி விட்டுவிடலாம் அதை வைத்து அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். (இந்த வசதி ஆம்வேயில் கூட இல்லை என்று நினைக்கிறேன்). இதெல்லாம் நிறைவேற வேண்டுமானால் “பைபிள்” என்ற புத்தகத்தை ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருந்து அதிலிருந்து பத்து பிரசங்கம் செய்யத் தெரிந்துவிட்டால் போதும்.

வேதம் இப்படிப்பட்டவர்களைக் குறித்து எச்சரிக்கிறது:

இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்; விபசார மயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தைவிட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.

செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியைவிரும்பி,தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது. இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள்; என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. (2 பேதுரு 2: 13-17)

அதற்காக நான் இன்று உண்மை ஊழியர்களே இல்லை என்று நான் சொல்லவரவில்லை. இன்றும் உண்மை ஊழியர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் நமக்கு அவர்களை அடையாளம் காணத் தெரியவில்லை. அவர்களை அங்கீகரியாமலும் கனப்படுத்தாமலும் போனது அவர்கள் குற்றமல்ல, நம் குற்றம். நாம் ஊழியக்காரனிடம் இயேசுவின் சுபாவத்தைத் தேடியிருப்போமானால் மெய்யான ஊழியனை முதல் தேடலிலேயே கண்டறிந்திருப்போம். நாம் ஊழியக்காரன் வழியாக உலக ஆசீர்வாதங்களையும், சரீர சுகத்தையும், தீர்க்கதரிசனங்களையும் அற்புத அடையாளங்களையும் அல்லவா தேடுகிறோம். நாம் இந்த அளவைகளை வைத்து ஜீவியகாலமெல்லாம் தேடினால்கூட ஒரு மெய்யான ஊழியனையும் கண்டறிய நம்மால் இயலாது.

நாம் ஒரு துரதிருஷ்டசாலிகள்! ஏனெனில் நம்காலத்தில் அச்சடிக்கப்பட்ட வேதாகமம் எளிதாகக் கிடைக்கிறது. அதை சாத்தான் தன் ஆளுகைக்குட்பட்ட மனிதர்களிடம் கொடுத்து அதைக்கொண்டே நம்மை வஞ்சிக்கிறான். எத்தனை துர்உபதேசங்கள், எத்தனை புரட்டுகள்துர்!! எத்தனை போலிகள்!! எத்தனை சபைப் பிரிவுகள்!!!

நாம் பாக்கியவான்கள்! ஏனெனில் நம்காலத்தில் அச்சடிக்கப்பட்ட வேதாகமம் எளிதாகக் கிடைக்கிறது. அதை தேவன் நம்கையில் கொடுத்து நாம் அதை கருத்தாய் வாசித்து தூய ஆவியானவரை அண்டிக்கொண்டு கடைசிகால வஞ்சகத்துக்குத் தப்பித்துக்கொள்ளும் போக்கையும் உருவாக்கியிருக்கிறார்.

வஞ்சிக்கப்படுவதும், தப்பித்துக்கொள்வதும் நம் கையில்!!

-வாட்ச்மென்

உம் அரசு வருக- பாகம் 6

இத்தொடரின் முந்தைய பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும்
இத்தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும்

கர்த்தர் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்துள்ள மகத்துவமான பரிசுகளில் ஒன்று அவருடைய வேதம் ஆகும். கர்த்தருடைய வேதம் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது கருப்பு அட்டையில் வெள்ளைத்தாளில் சிறு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய புத்தகம். கர்த்தருடைய வேதம் என்பது என்ன?அது ஒரு தோல்சுருளா? ஒரு பெரிய புத்தகமா? அல்லது இக்கால ஹைடெக் மொபைல் அப்ளிகேஷனா?

கர்த்தருடைய வேதம் என்பது அவரது கற்பனைகளும் போதனைகளும் ஆகும். அதை அவர் கற்பலகையிலோ, காகிதத்திலோ, மென்பொருளிலோ மாத்திரம் அல்ல. மிக மிக மிகப் பிரதானமாக பிதா அதை ஒவ்வொரு பிள்ளையுடைய  இருதயத்திலும் பரிசுத்த ஆவியானவர் மூலமாக எழுதுகிறார்.  கீழ்கண்ட ஆணித்தரமான வாக்குத்தங்களைப் பாருங்கள்!

அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை (எபிரெயர் 8:10,11).

நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. (1 யோவான் 2:27)

ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது… அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.ழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? (2 கொரி 3: 3-8)

ஆக…அச்சடிக்கபட்ட வேதத்தை யார்வேண்டுமானாலும் கையில் வைத்துக்கொள்ளலாம். பிசாசுக்கு எல்லா மொழிபெயற்ப்புகளிலிருக்கும் எல்லா வசனங்களும் அத்துப்படி. ஆனால் யாருடைய இருதயத்தில் உடன்படிக்கையின் வார்த்தை எழுதப்பட்டிருக்கிறதோ அவர்களே வேதத்தைப்பெற்ற தேவபுத்திரர் ஆவார்.

தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க..என்று யோவான் 10:35-இல் இயேசுவே சொல்லுகிறார்.

மோசே மூலமாய் அருளப்பட்ட பழைய உடன்படிக்கையானது கற்பலகையிலும் தோல்சுருளிலும் எழுதப்பட்டு அபிஷேகம் பண்ணப்பட்ட இறைப்பணியாளர்கள் வழியாக மக்களுக்கு கொடுக்கபட்டது. ஆத்மமீட்பு பெறாத மனிதனின் பரிதாப நிலை அதுதான். அவனால் தேவனிடத்திலிருந்து எதையுமே நேரடியாகப் பெற இயலாது. அவனுக்கு ஒரு மத்தியஸ்தன் தேவை. ஆனால் புதிய ஏற்பாட்டிலோ திரைச்சீலை இரண்டாகக் கிழிக்கபட்டு பிரிவினையாய் இருந்த நடுச்சுவர் தகர்க்கப்பட்டு, நாம் “அப்பா பிதாவே…” என்று கூப்பிடத்தக்க புத்திர சுவீகாரத்துக்குள் நுழைந்துவிட்டோம். இனி மத்தியஸ்தன் தேவையில்லை..

ஆனால்…துரதிர்ஷ்டவசமாக இன்றைய நவீன கிறிஸ்தவம் சோரம்போய் தேவமகிமையை இழந்து நிற்கக் காரணம். மேய்ப்பருக்கு தன் செவியை விலக்கியதே! அவரது நுகத்தை ஏற்றுக்கொண்டு அவரிடம் கற்றிருந்திருப்போமானால் அவர் யார், அவருக்குள் நாம் யார் என்ற இரகசியம் விளங்கியிருந்திருக்கும்.

“இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன் (எபே 5:32)” என்று பவுல் சொல்லுகிறார்.

அது என்ன இரகசியம்?

நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோமாம். கர்த்தர் தமது சொந்த சரீரத்தை தாமே போஷித்துக் காப்பாற்றுகிறாராம். ஆனால் கிறிஸ்து இரத்தம் சிந்தி சம்பாதித்த இந்த உன்னதமான வாழ்க்கையை புறம்பே தள்ளிவிட்டு இன்றைய கிறிஸ்தவம் இன்று மீண்டும் எழுத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. மணவாட்டி கண்கள் கட்டப்பட்டவளாய் கல்வாரி மலையிலிருந்து மறுபடியும் சீனாய் மலைக்கு இழுத்துச் செல்லப்படுகிறாள். இது மாபெரும் அவலம்! அநியாயம்!!!

இங்கு நான் மிக மிக முக்கியமானதொரு கேள்வியை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். சற்றே சிந்தித்துப் பாருங்கள்!! நாம் அனைவருக்கும் ஆதித்திருச்சபையை நன்றாகத் தெரியும். இந்த 20 நூற்றாண்டு வரலாற்றில் சிறப்பான, சாட்சியான சபை ஆதித்திருச்சபையே !

உங்களுக்குத் தெரியுமா? அவர்களிடம் நம்மிடம் உள்ளதுபோல அச்சடிக்கபட்ட வேதாகமம் இல்லை. சுவிசேஷங்கள் மற்றும் நிருபங்கள் எழுதி தொகுக்கப்படவில்லை. விசுவாசிகள் கையில் நிருபங்களும் சுவிசேஷங்களும் தொகுக்கப்பட்டு தரப்பட்டது இரண்டாம் நூற்றாண்டில்தான். ஆனால் அந்த முதல் நூற்றாண்டு விசுவாசிகளின் சாட்சியைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது தெரியுமா?

அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார். (அப் 2: 2-47)

உங்களாலும் என்னாலும் இந்த வாழ்வைக் கனவேனும் காண இயலுமா? நொண்டிச் சாக்குகள் சொல்லாமல், மாய்மாலம் பண்ணாமல் குறைந்த பட்சம் உண்மைகளையாவது திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளலாமே!

சுவிசேஷங்களும் நிருபங்களும் எழுதப்படாத காலத்தில், அச்சிடப்பட்ட வேதாகமம் இல்லாத காலத்தில் வேதத்தின்படி வாழ்கிற, உலகத்தைக் கலக்குகிற சிறு கூட்டம் ஒன்று வாழ்ந்தது என்ற வரலாற்று உண்மையை நான் உணர்ந்த நாளில் யாரோ என்னை ஓங்கி செவுளில் அறைந்தது போல இருந்தது. நூற்றுக்கணக்கணக்கான வேதாகம மொழிபெயற்ப்புகளை வைத்துக் கொண்டு, ஆயிரக்கணக்கான விளக்கவுரைகளை வைத்துக்கொண்டு நான் ஏன் இன்னும் தோற்றுக் கொண்டிருக்கிறேன்!!?? அப்படியானால் அவர்களை முடுக்கியது எது? என்னை முடக்குவது எது? அந்த அதிஉன்னத வாழ்வை அவர்களுக்கு சாத்தியமாக்கித் தந்தது எது? அது எனக்கோ கானல்நீராகிப் போனதன் மர்மம் என்ன? பரிசுத்த ஆவியானவர் மூலம் வேதமானது அவர்களது இருதயத்தில் எழுதப்பட்டிருந்ததால் அல்லவோ அது அவர்களுக்கு சாத்தியமானது?  பிரதான மேய்ப்பருக்கு செவிகொடுத்தலின் மேன்மையை இன்று நாம் வெறும் வரலாறாகப் படித்துக் கொண்டிருக்கிறோம், அவர்களோ அதில் வாழ்ந்தார்கள்.

என்னையும் உங்களையும் முடக்கியது எது தெரியுமா?

வேதத்தை பட்டயம் என்றும், அக்கினி என்றும் வேதமே வருணிப்பது மகாப் பெரிய உண்மையாகும். பட்டயமும் சரி, தீயும் சரி சரியாகப் பாவித்தால் நன்மைதரும், தவறாகக் கையாண்டாலோ காயமும்  மரணமும் ஏற்படும். நான்காம் நூற்றாண்டுக்குப் பின் ஒரு மாபெரும் இருள் சபையைக் கவ்விப்பிடித்தது. ஜனங்கள் வேதமுமின்றி, பரிசுத்த ஆவியுமின்றி “ஆவிக்குரிய பாபிலோனுக்கு” அடிமையாய்ப் போனார்கள். பாபிலோன் சொல்வதே வேதம் என்றாகிப் போனது. இந்நிலை மாற 15 ஆம் நூற்றாண்டுகளில் ஜான்விக்ளிப் போன்ற விசுவாச வீரர்கள் தம் உயிரையும் பணையம் வைத்து இருளுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட வேதபுத்தகத்தை மறுபடியும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தார்கள். பின்னர் உலகின் பல மொழிகளிலும் வேதாகமம் அச்சிடப்பட்டு எல்லோர் கைக்கும் வந்து சேர்ந்து விட்டது. இருளில் மூழ்கியிருந்த உலகத்துக்கு இது தேவனும் அவரது உண்மை ஊழியர்களும் சேர்ந்து கொடுத்த மாபெரும் பரிசாகும்.

அந்த பரிசு கிடைத்தவுடன் இருள் விலகியிருக்க வேண்டும், சபையின் காயம் ஆறியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? இன்னும் ஆழ்ந்த இருள் சபையைக் கவ்விப்பிடித்துவிட்டது. காயமானது இன்னும் உக்கிரமாகி சீழ்பிடித்துவிட்டது. இதற்க்குக் காரணம் என்ன பரிசில் ஏதேனும் குறையா? அல்லது பரிசு கொடுத்தவர்களிடம் குறையா? இரண்டுமே இல்லை. பரிசு பெற்ற நம்மிடமே குறை.

தேவனுடைய பிரமாணம் நம்மை கிருபைக்குள் வழிநடத்தும் ஆசிரியர் என்று வேதம் சொல்லுகிறது. 1 யோவான் 2:27 சொல்லுவது போல பரிசுத்த ஆவியானவர் துணையுடன் வேத புத்தகத்தை வாசித்து அவரைப் பற்றிக்கொண்டு அவரிடம் கற்று இருந்திருப்போமானால் வேதத்தை மொழிபெயற்ப்பதற்காக ஜான் ஹஸும், வில்லியம் டிண்டேலும் உயிரோடு எரிக்கப்பட்டு மரணித்ததற்கும், வில்லியம் கேரி எல்லாவற்றையும் இழந்ததோடு தனது தலைப்பிள்ளையையும் தன் சொந்தக் கைகளால் குழிதோண்டி புதைத்துவிட்டு ஊழியம் செய்ததற்க்கும் அர்த்தம் இருந்திருக்கும். ஒரே ஆவியானவர் உதவியுடன் சத்தியத்தை வாசித்து ஒரே விதமாகப் புரிந்துகொண்ட ஒருமனமுள்ள சந்ததி ஒன்று எழும்பியிருக்கும்.

விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.(அப் 4:32)என்ற வரலாறு மீண்டும் திரும்பியிருந்திருக்கும். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன் (யோவான் 17:21) என்ற இயேசுவின் ஜெபத்துக்கு பதில் கிடைத்திருந்திருக்கும்.

ஆனால் நாம் செய்தது என்ன?

நமக்கு தலைக்கு மேல் ஏகப்பட்ட பூமிக்குரிய அலுவல்கள் இருக்கிறபடியாலும் பரிசுத்த ஆவியானவரின் சத்தம் கேட்பதற்க்கு நேரமும் பொறுமையும் இல்லாதிருப்பதாலும் “நமக்கு நாமே” திட்டம்போல நாமே ஒரு அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பில் வேதாகமக் கல்லூரி என்பதை ஓர் அங்கமாக்கி அதற்க்கு சிலரை அனுப்பி அவர்களுக்குத் தேவையான சம்பளத்தையும் கொடுத்து “எங்கள் சார்பாக நீங்கள் வேதத்தை முழுமையும் கற்று எங்களுக்குப் போதியுங்கள்…” என்ற பொறுப்பை அவர்கள் தலையின் மீது சுமத்திவிட்டோம். அவர்களும் அதைப் பரிசுத்த ஆவியானவரிடம் அல்லவா கற்கவேண்டும்! அவர்கள் பரிசுத்த ஆவிக்கு எங்கே போவார்கள்? கொடுக்கப்பட்ட நான்கு வருடத்துக்குள் கோர்ஸை முடிக்கவேண்டுமல்லவா? ஆவியானவரிடம் எங்கே கற்பது? அவர் நம் இழுவைக்கு வரமாட்டாரல்லவா? எனவே ஒரே வழி புத்தகத்தில் கற்று அறிவைப் பெருக்கிக் கொண்டு அவர்கள் தாம் தலையில் ஏற்றிய அறிவை நம் தலைக்குள் இறக்குவது. ஆக இறுதியில் இயற்பியல், வேதியல், விலங்கியல், தாவரவியல் போல வேதம் “ஆன்மஇயல்” என்ற ஒரு சாதாரண ஏட்டுச்சுரைக்காய் ஆகிப்போனது. ஆன்மஇயலுடன் வணிகவியலைச் சேர்த்து இன்று பலர் அருமையாகக் கல்லாக் கட்டுகிறார்கள்.

இதுதான் தன் தலைமகனை தரைக்குத் தாரைவார்த்துவிட்டு கண்ணும் கருத்துமாக சொந்தமொழி வேதத்தை நம் கையில் வடித்துத் தந்த வில்லியம் கேரி போன்றோருக்கு நாம் செய்த மரியாதை. அச்சடிக்கபட்ட வேதம் கையில் இருக்கிறபடியால் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பதுபோல இன்று ஆளாளுக்கு தங்கள் இஷ்டத்துக்கு வேதத்தைப் போதிக்கிறார்கள். குறைந்த பட்சம் பெரேயா விசுவாசிகளைப் போல கேட்கும் வசனத்தை ஒப்பிட்டு சரிபார்த்துத் கொள்ளும் உரைகல்லாகக் கூட நம்மில் யாரும் இன்று வேதபுத்தகத்தைப் பயன்படுத்துவதில்லை. உபதேச மாறுபாடுகளின் விளைவாக புற்றீசல்போல சபைப் பிரிவுகள் இன்று பெருகிவிட்டன. ஒருவர் சொல்வதை இன்னொருவர் ஏற்றுகொள்வதில்லை. கசப்பு, வெறுப்பு, போட்டி பொறாமை, அரசியல் எல்லாம் இன்று கிறிஸ்தவத்தில் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டன. இந்த அவலம் இன்று கிறிஸ்தவத்தாலேயே சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. இது அச்சடிக்கப்பட்ட வேதம் இல்லாதிருந்த முந்தின கால எத்தைப் பார்க்கிலும் மிகக் கொடிதான எத்தாகும். அறிவில்லாமையால் சங்காரமாவதென்பது இதுதான்! எழுத்து எத்தனை கொடுமையாகக் கொல்லுகிறது பாருங்கள்!!!!

உயிர்ப்பிக்கும் ஆவி எங்கே? அதன் விளைவாக விளையும் ஒருமனம் எங்கே??

இன்று நாங்கள் அனுதினமும் அநேக விசுவாசிகளை சந்திக்கிறோம். ஒருவர் ஆவிக்குரிய காரியத்தைக் குறித்துப் பேசுவாரென்றால் அவர் பேச ஆரம்பித்து சில நிமிடங்களுக்குள் அவர் எந்த கிறிஸ்தவ ஆசிரியரின் வாசகர் என்பதை எளிதில் கண்டுகொள்ள முடிகிறது.

ஏ.டபிள்யூ.டோசர், வாட்ச்மேன்நீ, லியோனார்ட் ரேவன்ஹில், சகரியாபூணன் போன்ற ஆரோக்கியமான உபதேசங்களை (Sound Doctrins) எழுதும் ஆசிரியர்களுக்கு ஒரு வாசகர்  கூட்டம்.

டெரிக்பிரின்ஸ், பீட்டர் வேக்னர், சகரியா டேனிபார்ம் போன்ற பிசாசுஇயல் மற்றும் ஆவிக்குரிய போராட்டம் (Spiritual Warefare) பற்றி எழுதும் ஆசிரியர்களுக்கு ஒரு வாசகர் கூட்டம்.

ஜாய்ஸ் மேயர், கென்னத் ஹேகின், ஜோயல் ஒஸ்டீன், ஜோசப் பிரின்ஸ், சாம்.பி.செல்லதுரை போன்ற செழிப்பு உபதேச(Prosperity Gospel) எழுத்தாளர்களுக்கு ஒரு பெரும் வாசகர் கூட்டம்.

ரெய்னார்ட் போங்கே, பில்லி கிரஹாம், டி,ஜி,எஸ் தினகரன், மோகன்.சி.லாசரஸ் போன்ற சுவிசேஷ எழுத்தாளர்களுக்கு ஒரு வாசகர் கூட்டம்.

கேதரின் பாக்ஸ்டர், ரொனால்ட் பக் போன்ற மோட்சம், நரகம், தேவதூதர் தரிசனங்களை எழுதும் ஆசிரியருக்கு ஒரு வாசகர் கூட்டம் என கூட்டம் கூட்டமாகப் பிரிந்து நிற்கிறோம். இதில் பிரதான மேய்பரின் சத்தத்தைக் கேட்டு அவருக்கு அந்தரங்கத்தில் செவிகொடுக்கும் ஆடுகள் எத்தனை பேர் இருக்கிறோம்? இதுதான் தன் சரீரத்தைக் குறித்த கிறிஸ்துவின் சித்தமா?

நாம் வாயைத் திறந்தால் நமது ஆஸ்தான எழுத்தாளரின் சிந்தனைதான் வெளியே கொட்டுகிறதே தவிர ஆவியானவர் நம்முடன் அனுதினமும் பேசுகிறார் என்பதற்கான அறிகுறியே எள்ளளவும் இல்லையே!

கடைசி நாளில் ஒரு பெருங்கூட்ட ஜனத்தைப் பார்த்து “நான் உங்களை அறியேன்!” என்று சொல்லப் போகிறாராம்.

ஆரோக்கிய உபதேச எழுத்தாளரின் வாசகராக இருப்பவர்கள், செழிப்பு உபதேச எழுத்தாளரின் வாசகருக்கு உங்கள் நம்பிக்கை தவறு என்று அறிவுரை வழங்குகிறோம். ஆரோக்கிய உபதேசம் பேசுவது சரிதான்!! ஆனால் வெறும் ஆரோக்கிய உபதேசத்தை ஏட்டளவில் கற்று என்ன பயன்??? நாம் மேய்ப்பரின் சத்தத்தை தனிப்பட்ட விதத்தில் கேட்கிறோமா அல்லது வெறும் புத்தகத்திலும் இணையத்திலும் படிக்கும் ஆரோக்கிய உபதேசம் மாத்திரமே நம் உணவாயிருக்கிறதா? அப்படியானால் நாமும் புறக்கணிக்கப்படும் ஆபத்திலிருக்கிறோம் என்பதை அறிவோமாக.

 வேதம் சபைக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவை தலைக்கும் உடல் உறுப்புகளுக்கும் ஒப்பிட்டிருக்கிறது. உடலின் ஒவ்வொரு உறுப்பும் தலையோடு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்புக்கும் மூளை நேரடியாகவே செய்தி அனுப்ப இயலும். கால் பெருவிரலை அசைக்க வேண்டுமானால் மூளைக்கு வாயின் உதவி தேவையில்லை. மூளை நேரடியாக செய்தி அனுப்ப கால் பெருவிரல் தன்னால் அசையும். அதுதான், அவன்தான் உண்மையான விசுவாசி, தேவபுத்திரன்….

 கடந்த பாகத்தில் எழுதியதை மறுபடியும் நினைப்பூட்டி முடிக்கிறோம். நல்ல மேய்ப்பனானவர் தன் ஒவ்வொரு ஆட்டுடனும் பேசுகிறார். நீங்கள் அவருடைய ஆடுதானா?

-Watchmen

கிரஹாம் ஸ்டெயின்ஸ் நினைவு நாளன்று சால்வேஷன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட “இரத்த சாட்சிகள்-அன்றும் இன்றும்” என்ற நிகழ்ச்சி

Follow

Get every new post delivered to your Inbox.

Join 208 other followers